தேக்கடியில் கேரள வனத்துறையினரை கண்டித்து குமுளி வாடகை ஜீப், கார் ஓட்டுநர்கள் 3 ஆவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி, ஆனவாச்சல் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதால், வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன, இதன் பேரில், கேரள வனத்துறையினர் குமுளி வாடகை வாகனங்களை கடந்த வியாழக்கிழமை முதல் ஆனவாச்சல் வாகன நிறுத்தத்தில், நிறுத்த அனுமதிக்கவில்லை.
இதனால் அதன் ஓட்டுநர்கள் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தேக்கடி செல்லும் நுழைவு வாயிலிலும் வெள்ளிக்கிழமை மறியல் நடத்தினர். போராட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடக்காததால் சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதனால் 3 ஆவது நாளாக தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல முடியவில்லை. சுற்றுலா பயணிகள் வராததால் தேக்கடி வெறிச்சோடி காணப்பட்டது. படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.