கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு 207 விவசாயிகளுக்கு அனுமதி
தேனி மாவட்டத்தில் நிலச் சீர்திருத்தப் பணிகளுக்காக கண்மாய் மற்றும் குளங்களில் மண் அள்ளுவதற்கு மொத்தம் 207 விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் நிலச் சீர்திருத்தப் பணி, சொந்தப் பயன்பாடு மற்றும் மண் பாண்டம் செய்வதற்கு கரம்பை மண் மற்றும் சவுடு மண் அள்ளுவதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க கடந்த ஜூன் 1, 8 ஆகிய தேதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம் முகாம்களில், கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்த 207 விவசாயிகளுக்கு மொத்தம் 44 ஆயிரம் கன மீட்டர் அளவிற்கு மண் அள்ளிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் நடை அனுமதிச் சீட்டு பெற்று விவசாயிகள் கண்மாய்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு மண் அள்ளி வருவதாகவும், இந்த அனுமதி 15 நாள்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் கூறினர்.