பெரியகுளத்தில் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பெரியகுளம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஆஸ்டின் (45). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஒரு அறையிலிருந்த 2 பவுன் நகை, கை கடிகாரம், ரூ. 42,500 ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஆஸ்டின் வீட்டருகே திருட்டு சம்பவம் நடைபெற்ற ஒரு நாளுக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிதிரிந்த இருவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
அப்போது பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த முத்தையா (25), முத்துப்பாண்டி (24), ஜெகதீஸ் (23) மற்றும் வத்தந்தோப்பை சேர்ந்த அஜீத்குமார் (25) ஆகிய நால்வரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நால்வரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.