ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூரில் பேருந்து நிறுத்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கண்டமனூர் ஆட்டோ மற்றும் மினி லோடு வாகன ஓட்டுநர்கள் நல சங்கத் தலைவர் ஆர். சுப்புராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
கண்டமனூர் அம்பேத்கர் பேருந்து நிறுத்தப் பகுதியில் தனியார் திருமண மண்டபம் மற்றும் கடைகள் ஊராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடம் மற்றும் சாலையை ஆக்கிரமித்துச் செயல்படுகின்றன. இதனால், இச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே, கண்டமனூர் அம்பேத்கர் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.