போடி கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து குறைந்துவிட்டதால், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொட்டகுடி ஆறானது, போடி குரங்கணியில் தொடங்கி போடி நகர், தேனி நகர் வழியாகப் பாய்ந்து வைகை ஆற்றில் கலக்கிறது. இது, போடி நகர் மற்றும் போடி அருகே உள்ள கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத் தேவைகளுக்கும் பயன்படுகிறது.
கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து முழுவதும் குறைந்து வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால், குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், போடி நகராட்சி குடிநீர் விநியோகமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, போடி நகர மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என, நகராட்சி பொறுப்பு ஆணையர் கே. ஜெயராமராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.