தேனியில் பெண் கூலி தொழிலாளியை கொலை செய்ததாக, தேனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தேனி உழவர் சந்தை கடைகளில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் தேனியைச் சேர்ந்த ஐயப்பன் மனைவி சாந்தி (55). இவர், கடந்த 22-ஆம் தேதி உழவர் சந்தை அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். சாந்தியின் சாவில் மர்மம் உள்ளதாக, அவரது சகோதரர் சுகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், சாந்தியை கொலை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர்களான தேனி அல்லிநகரம் அம்பேத்கர் நடுத் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் மோகன்ராஜ் (21) மற்றும் குறிஞ்சி நகரைச் சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
உழவர் சந்தை அருகே மது போதையில் இருந்த மோகன்ராஜும், மணிகண்டனும், சாந்தியை பாலியல் பலாத்காரம் செய்த முயன்றதாகவும், அப்போது தப்பி ஓட முயன்ற அவரை கழுத்தை நெரித்து, கீழே தள்ளிவிட்டு கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.