போடியில் கஞ்சா, மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
போடி நகர் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போடி நந்தவனம் காளியம்மன் கோயில் தெருவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த கூடலூர் அரசமரத் தெருவைச் சேர்ந்த விஜயன் என்பவரை போலீஸார் பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர் விற்பதற்காக கால் கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விஜயனை கைது செய்தனர். இதேபோல், போடி நகரில் ரோந்து சென்றபோது, பெரியாண்டவர் கோயில் அருகே ராஜாங்கம் (71), வேன் ஸ்டாண்ட் அருகே பாண்டி (63), சாலைக் காளியம்மன் கோயில் அருகே லோகநாதன் (52) ஆகியோர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, இந்த 3 பேரையும் கைது செய்தனர்.