மூலவைகை ஆற்று உறை கிணறுகள் வறண்டு வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

கடமலைக்குண்டு  மூல வைகை ஆற்றுப் பகுதிகளில் உள்ள உறை கிணறுகளில் தண்ணீர் வற்றி வருவதால், குடிநீர் 

கடமலைக்குண்டு  மூல வைகை ஆற்றுப் பகுதிகளில் உள்ள உறை கிணறுகளில் தண்ணீர் வற்றி வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்தில் அமைந்துள்ள 150 கிராமங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக வைகை ஆறு விளங்குகிறது. 
கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் வைகை ஆற்றில் உறை கிணறு அமைக்கப்பட்டு, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதன் காரணமாக, வைகை ஆறு கடந்த 10 மாதங்களாக வற்றிய நிலையிலேயே உள்ளது.
வைகை  ஆறு வற்றினாலும், உறை கிணறுகளில் உள்ள நீரை வைத்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது உறை கிணறுகளில் உள்ள நீரின் மட்டமும் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.
கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட கிராமங்களில் உறை கிணறுகளில் தண்ணீரின்றி முற்றிலுமாக வற்றிவிட்டது. இதனால், இப்பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 
பொதுமக்கள் ஆட்டோவில் வெகு தொலைவில் உள்ள தோட்டங்களுக்கு  சென்று, குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் இந்த அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை என்றும், கடந்த 40 ஆண்டுகளில் 10 மாதங்களுக்கும் மேலாக வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்பட்டதும் இல்லை என்று, பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 
தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை  போக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com