வைகை அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்துவரும் நிலையில், அணையிலிருந்து முறைகேடாக தண்ணீர் திறப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போது நீர்வரத்தின்றி 31 அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பு குறைவாக உள்ளதால், அணையிலிருந்து விநாடிக்கு 60 கனஅடி வீதம் குடிநீருக்காக திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட முதல்போக பாசனத்துக்காக ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால், ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஏற்கெனவே மிகவும் குறைவாக நீர் இருப்பு உள்ள நிலையில், வைகை அணையின் தடுப்பணைப் பகுதியில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை, ஆற்றின் மதகுகள் வழியாக முறைகேடாக திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், தொடர்ந்து சட்டவிரோதமாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழையின்றி நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படும் வைகை அணையிலிருந்து இதுபோல சட்டவிரோதமாக தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் மேலும் சரியும் அபாயம் உள்ளது. எனவே, சட்டவிரோதமாக தண்ணீர் திறந்துவிடும் அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.