தேனி மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆறுகள், ஓடைகள், குளங்கள், கண்மாய்களில் இருந்து சட்ட விரோதமாக  மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான மானாவாரி தோட்டங்களில் மண் அள்ளிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இதைப் பயன்படுத்தி, உத்தமபாளையம், தேவாரம் , கம்பம், பொட்டிப்புரம், டி.மீனாட்சிபுரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட இடங்களில்  மணல் எடுக்கப்படுகிறது. தனியார் இடத்தில் மணல் எடுக்க 15 நாள் மட்டுமே அனுமதி உள்ளது. இந்நிலையில் பல மாதங்களாக தொடர்ந்து மணல் எடுக்கப்பட்டு, அவை கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கேரளத்திற்கு செல்லும் கனிம வளங்கள்: 
கேரளத்தில் உள்ள நீர்நிலைகளில் மணல் அள்ளுவதற்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. எனவே, அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் உள்ளிட்ட பொருள்கள் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. 
கனிம வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்: 
தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் பணத்திற்கு ஆசைப்பட்டு, அண்டை மாநிலமான கேரளத்துக்கு தமிழகத்திலிருந்து  மணல், செம்மண், பாறை மண் போன்றவை அதிகளவில் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இவற்றைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: தேனி மாவட்டம், விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்குள்ள முல்லைப் பெரியாறு , வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி, சண்முகா நதி , மஞ்சளாறு போன்ற பகுதிகளில் அதிகளவில் மணல் அள்ளப்படுவதால் ஆறுகள் மாசடைகின்றன.
தற்போது, தனியார் தோட்டங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் அதைப் பயன்படுத்தி சட்ட விரோதமான முறையில் அதிகளவில் மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதனால், இப்பகுதியில் கனிம வளம் பாதிக்கப்படுகிறது. எனவே, இவற்றைத் தடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி கூறியது: தனியாருக்கு சொந்தமான இடத்தில் தூசி மண் அள்ளிக் கொள்ள அனுமதி இருப்பதால்,  அதை கேரளத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால், நீர்நிலைகளில் மணல் அள்ள அனுமதியில்லை. அவ்வாறு அள்ளிச் சென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com