தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சொகுசு கார்களை திருடும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை உத்தமபாளையம் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
உத்தமபாளையம் கோகிலாபுரம் விலக்குப் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் காரில் வந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அந்த காருக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும, தொடர் விசாரணையில் அது திருட்டு கார் என்பதும் தெரியவந்தது. பின்னர், பிடிபட்ட இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பாண்டித்துரை (25), மதுரை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் வெற்றிவேல் (எ) மாயக்கண்ணன் (27) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் அளித்த தகவலின்பேரில், முக்கிய குற்றவாளியான மதுரை வீரபாண்டி கருப்பாயூரணியைச் சேர்ந்த அம்மாவாசி மகன் கம்பளிகருப்புவை (33) போலீஸார் வெள்ளிக்கிழமை பிடித்து விசாரித்தனர்.
இதில், திருடப்படும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கம்பளி கருப்புவிடம் கொடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை, தேனி மாவட்டம் உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருடிய 5 சொகுசு கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்ததை உத்தமபாளையம் போலீஸார் மீட்டனர்.
இது குறித்து உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தார்.