பெரியகுளம் சிறையில் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கைதி, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள ராஜதானியை சேர்ந்தவர் கருப்பசாமி (31). இவர் போக்ஸோ சட்டத்தில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பெரியகுளம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கிருந்து மீண்டும் சிறைக்குத் திரும்பிய கருப்பசாமி, கழிப்பறைக்குச் சென்று அங்கு கழிப்பறை சுத்தம் செய்வதற்கு வைத்திருந்த ரசாயனப் பொடியை (கிளீனிங் பவுடர்) தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே சிறைக்காவலர்கள் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தென்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.