பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றியதற்காக இந்திராகாந்தி விருது பெற்ற பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதல்வருக்கு கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பெங்களூருவில் உள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் முன்னேற்றத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். இந்தாண்டு பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதல்வர் சேசுராணிக்கு கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி பெங்களூருவில் விருது வழங்கினர். இதனையடுத்து கல்லூரி சார்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரிச் செயலாளர் ஜே.குயின்சிலி ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
விழாவில் விருதுபெற்ற முதல்வருக்கு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.