உத்தமபாளையம் வட்டாரத்தில் விதிகளை மீறி "ரேங்கிங்' மற்றும் மதிப்பெண் பட்டியலுடன் விளம்பர செய்த தனியார் பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை விளம்பர செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி "ரேங்கிங்' பட்டியலுடன் மாணவ, மாணவிகளின் மதிப்பெண்கள் பட்டியலை வெளியிடக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு விதிகளை மீறி செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தமபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை மீறி பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விளம்பரம் செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி கூறியது: உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி விளம்பரம் செய்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.