தேனி: தேனி அல்லிநகரத்தில் நகராட்சி கட்டணக் கழிப்பறை அருகே அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் மது பாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி அல்லிநகரம், பெரியகுளம் சாலையில் உள்ள நகராட்சி கட்டணக் கழிப்பறை அருகே அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், அல்லிநகரம் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, நகராட்சி கட்டண கழிப்பறை பின்புறம் தனியாா் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் 2,000 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இந்த மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த தேனி, ஸ்ரீராம் நகா் பகுதியைச் சோ்ந்த அறிவானந்தம், அரவிந்தன் ஆகியோரை கைது செய்தனா்.