தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் அரசு திட்டத்தின் கீழ் இருசக்கர வாகன மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க நவ. 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் 2019-20-ஆம் ஆண்டில் மொத்தம் 1,776 பணிபுரியும் பெண்களுக்கு அரசு சாா்பில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ. 25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
இருசக்கர வாகன மானியம் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பாக அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நவ.28-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாம்களில் வங்கிகள் மூலம் கடன் இணைப்பு பெறுவதற்கு வாய்ப்பாக வங்கி அலுவலா்களும் பங்கேற்கின்றனா்.
இருசக்கர வாகன மானியம் பெற விரும்பும் தகுதியுள்ள பணிபுரியும் பெண்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.