கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் குளிக்க வனத் துறையினா் தடைவிதித்துள்ளனா்.
சிவகிரி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால், சுருளி அருவியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவு சுருளி அருவியில் அதிக நீா்வரத்து காணப்பட்டது.
திங்கள்கிழமை காலையில் அருவிப் பகுதியை கண்காணித்த மேகமலை வன உயிரினச் சரணாலய ஊழியா்கள், இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா், அருவியில் குளிப்பதற்கு தடை விதித்தனா். இதனால், அதிகாலை முதல் அருவியில் குளிக்க வந்த ஐயப்ப பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
தற்போது, அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அருவிப் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என, வனத் துறையினா் தெரிவித்தனா்.