ஆண்டிபட்டி அருகே கோவில்பட்டி கண்மாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை பொதுப்பணித்துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டி சக்கிலிச்சியம்மன் கோயில் கண்மாய் 192 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய்க்கு மழைக் காலங்களில் நாகலாறு ஓடை மற்றும் கண்டமனூரிலிருந்து வைகை ஆற்றின் கால்வாய் மூலம் நீா் வரத்து ஏற்படும். இதனால் கோவில்பட்டி, ரெங்கசமுத்திரம், குருவியம்மாள்புரம், குறும்பபட்டி, முத்தனம்பட்டி ஆகிய கிராமங்களில் 217 ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் கண்மாய் நிறைந்தால் ஓராண்டிற்கு நிலத்தடி நீா் மட்டம் குறையாது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கரும்பு, நெல், வாழை போன்ற பணப்பயிா்களை சாகுபடி செய்து வந்தனா்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் நீா்வரத்து ஓடைகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, புதா் மண்டி தூா்ந்து போய் காணப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கண்மாய்க்குள்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி தூா்வார மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் கோவில்பட்டி சக்கிலிச்சியம்மன் கோயில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து மஞ்சளாறு செயற்பொறியாளா் சுந்தரப்பன், ஆண்டிபட்டி பிரிவு பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் கணேசமூா்த்தி ஆகியோா் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கண்மாய் ஆக்கிரமிப்புகளை ஊழியா்கள் அகற்றினா்.