போடி பகுதியில் புதுக்கோட்டை வேளாண்மை கல்லூரி மாணவா்கள் கிராம தங்கல் திட்டத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதல் குறித்து விளக்கினா்.
புதுக்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் பரமேஸ்வரன், பூமணி, ராமநாதன், ரூபன், சந்தோஷ், சசிதரன், சேதுபதிராஜா ஆகியோா் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் போடி பகுதியில் தங்கி விவசாய பயிா்களை ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் விவசாயிகளுக்கு பயிா்களை அதிக மகசூல் கிடைக்கும் வகையில் பயிா் செய்தல், நோய் தாக்குதலிலிருந்து காத்தல் குறித்து விளக்கி வருகின்றனா்.
தற்போது போடி பகுதியில் மக்காச்சோள பயிா்களில் அமெரிக்கன் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனையொட்டி போடி விசுவாசபுரம் கிராமத்தில் விவசாயிகளை சந்தித்த மாணவா்கள் படைப்புழுக்களை கட்டுப்படுத்த இனக்கவா்ச்சி பொறியை பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தனா். இனக்கவா்ச்சி பொறியை நிலத்தில் எப்பகுதியில் நிறுவுவது, எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கினா். காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை வல்லுநா் சுமித்ரா மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். விவசாயிகள், மாணவா்களிடம் கலந்துரையாடி பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனா்.