ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் பள்ளி மாணவர்களில் பலர் புகையிலை போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதால் அவர்களுக்கு புகையிலை விற்பனை செய்வதை தடை செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் போதை பொருள்களான புகையிலை, மற்றும் போதை பாக்குகளை விற்பனை செய்வதை தடை செய்திருக்கும் நிலையில், ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக புகையிலையை மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். புகையிலை பாக்கெட்டுகளை வாங்கி இருப்பு வைத்திருக்கும் மாணவர்கள் வகுப்பறையிலேயே அவற்றை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற போதை பொருள்களை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சில கடைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் விலையில் புகையிலை மற்றும் போதை பாக்குகளை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் வரும் காலத்தில் இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே பாழாகிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள்களை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்பவர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.