தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியிலுள்ள சமத்துவபுரத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சமத்துவபுரத்தில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிநீர், சுகாதார வளாகம், சாக்கடை வசதி, தெருவிளக்கு மற்றும் குழந்தைகள் விளையாடும் பூங்கா என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இவை அனைத்தும் முறையாக பராமரிக்காததால், பயன்பாடின்றி சேதமடைந்து உள்ளன.
இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் குப்பைகளால் நிரம்பி மூடியுள்ளது. தண்ணீரின்றி சேதமான குடிநீர் குழாய்கள் காட்சிப் பெருளாக உள்ளன. மேலும், 3 சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி இல்லாததால், பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதேபோல், குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம், பூங்கா, விளையாட்டு மைதானம் ஆகியனவும் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. எனவே, அடிப்படை வசதிகளான இவை அனைத்தும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, குடியிருப்புவாசிகள் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.