கம்பத்தில் கஞ்சா விற்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கம்பத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததன் பேரில், கம்பம்- கம்பம்மெட்டுச்சாலையில் உள்ள பால்பண்ணை அருகில் வடக்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ரங்கராஜ் மற்றும் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமாக சென்றவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசவே, போலீஸார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் பை ஒன்றில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த அரசன் (39) என்றும் தெரிய வந்தது. கம்பம் வடக்கு போலீஸார் கஞ்சாவை கைப்பற்றி, அரசனை கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.