ஆண்டிபட்டி அருகே அரசு வழங்கும் விலையில்லா ஆடுகள் பெறுவதற்கான பயனாளிகள் தேர்வில் குளறுபடி நடைபெற்று வருவதாகக் கூறி, பொதுமக்கள் கணக்கிடும் அதிகாரிகளை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா முத்தாலம்பாறை ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் கடந்த சில நாள்களாக கால்நடைத் துறையினர், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாடும்பாறை கால்நடை மருத்துவமனையில் பயனாளிகள் குறித்த தணிக்கை பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். இதில், ஆளும் கட்சியினர் மனுக்களை மட்டும் பரீசிலிக்கப்படுவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே, அங்கு திரண்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடும்பாறை போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தகுதியுள்ள நபர்களை பயனாளிகளாகத் தேர்வு செய்வதாகவும், ஒருதலைபட்சமாக செயல்படமாட்டோம் எனவும் கால்நடைத் துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.