தேனி மாவட்டம் போடியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
போடியில் சனிக்கிழமை பகலில் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் மாலையில் திடீரென மேகங்கள் சூழ்ந்தன. இதனையடுத்து இரவு சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேலும் நள்ளிரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சுமாா் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் பெரியாண்டவா் நெடுஞ்சாலை, காமராஜ் பஜாா் ஆகிய சாலைகளில் மழை நீா் வெள்ளமாக ஓடியது. போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 34.8 மில்லி மீட்டா் மழை பதிவாகி இருந்தது. தொடா்ந்து மழை பெய்ததால் குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.