தேனி மாவட்டம் கோம்பையில் புரட்டாசி மாத திருவிழா தொடங்கிய நிலையில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோம்பையில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 5 வார சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். இதற்காக கோம்பையிலிருந்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ரெங்கநாதர் கோயில் வரையிலுள்ள 7 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை வழியாக அதிகளவில் பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்தாண்டு சனிக்கிழமை முதல் வாரத் திருவிழா தொடங்கியது.
இதற்காக தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் மற்றும் கேரளத்திலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். பெரும்பான்மையான பக்தர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள், ஜீப்களில் வந்து சென்றனர். இந்நிலையில், முதல் வாரத்திருவிழாவின் போது நூற்றுணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலையில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற சாலைப் பணிகள்
இன்னும் நிறைவடையவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
எனவே நெடுஞ்சாலைத் துறையினர் திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.