தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கடந்த 40 ஆண்டுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் சிக்கிய கரிச்சி ஊருணி மாவட்ட நிர்வாகம் மூலமாக மீட்டகப்பட்டது.
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அப்பிபட்டியில் உள்ளது கரிச்சி ஊருணி. மேகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் மழை நீரால் நிலத்தடிநீர் மட்டம் உயரும் வகையில் அப்பகுதியில் கரிச்சி ஊருணி இருந்தது. இந்த ஊருணிக்கு பருவமழைக் காலங்களில் போதுமான நீர் வரத்து இல்லாத நிலையில் வறண்டது.
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நீர் வரத்து ஓடை மற்றும் ஊருணியை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து கடந்த 40 ஆண்டுகளாக தோட்டமாக மாற்றி விவசாயம் செய்து வந்தனர். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆக்கிரமிப்பில் சிக்கிய ஊருணி மற்றும் ஓடையை மீட்டெடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே, மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து பணிகள் மூலமாக ஆக்கிரமிப்பில் சிக்கிய குளங்கள், ஓடைகள் உள்ளிட்டநீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும் எனக்கூறி அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, அப்பிபட்டியை சேர்ந்த விவசாயிகள் குடிமராமத்துப் பணிகள் மூலமாக தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கிய கரிச்சி ஊருணியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், நிலஅளவையர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் மற்றும் ஓடைப்பட்டி போலீஸாருடன் இணைந்து ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த கரிச்சி ஊருணி மற்றும் ஓடையை பொக்லைன் இயந்திரம் மூலமாக சனிக்கிழமை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், 40 ஆண்டுக்ள் ஆக்கிரமிப்பில் சிக்கிய ஊருணியை மீட்டெடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.