தேனி - பெரியகுளம் சாலையில் 15 கி.மீ. தொலைவில் 20 இடங்களில் வேகத்தடைகள் அமைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து தேனி 15 கி.மீ.தூரம் உள்ளது. இங்கிருந்து தாமரைக்குளம், கைலாசபட்டி, லட்சுமிபுரம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஊஞ்சாம்பட்டி பிரிவு என 5 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த சாலையில் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறது எனக்கூறி வேகத்தடை அமைக்கப்பட்டது.
கைலாசபட்டியில் மூன்று மாதங்களில் இரண்டு முறை விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து காவல்துறை சார்பில் கைலாசபட்டி பகுதியில் மட்டும் 10 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் பெரியகுளம், மாவட்ட நீதிமன்றம் என 7 இடங்களில் 20 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது 1 கி.மீ தூரத்திற்கு ஒரு வேகத்தடைக்கு மேல் என்ற எண்ணிக்கையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அதிகப்படியாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை குறிப்பிட்டு கட்செவி அஞ்சல் மற்றும் முகநூலில் கேலி செய்து பொதுமக்கள் விடியோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர், வேகத்தடைகள் காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இது குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் முருகன் தெரிவித்தது: கைலாசபட்டியில் விபத்து ஏற்பட்ட பகுதியில் இரண்டு அல்லது மூன்று வேகத்தடை அமைக்கலாம். அதைவிடுத்து 50 மீட்டர் தூரத்தில் 10 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. தேனியில் இருந்து பெரியகுளத்திற்கு 14 கி.மீ தூரத்திற்கு 20 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது என்றார்.