ஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்னையில் மகன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், வேதனையடைந்த தந்தை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (55). இவர் சொந்தமாக விசைத்தறிகூடம் வைத்து நெசவுத் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் மற்றும் கடைசி மகன் திருமணம் முடிந்து பெங்களூருவில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் செல்வக்குமார் திருமணம் முடிந்து, அருகிலேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில், ராமரிடம் அவரது மகன் செல்வக்குமார் சொத்துக்களை பிரித்து தருமாறு அடிக்கடி பிரச்னை செய்து வந்துள்ளார். மேலும், ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் தந்தை மீது வழக்கும் தொடர்ந்துள்ளார். இது குறித்து ஆண்டிபட்டி நீதிமன்றத்திலிருந்து ராமருக்கு சம்மன் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராமர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆண்டிபட்டி போலீஸார், ராமரின் சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.