தேனி-மதுரை நெடுஞ்சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனை ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் முன்பு 20-க்கும் மேற்பட்ட உணவகங்கள், தேநீர் கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் தினசரி சேகரமாகும் குப்பைகளை திருமலாபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் இங்குள்ள கடைகளில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை முன்பு குப்பைகளை அத்துமீறி கொட்டி வருகின்றனர். இதனால் சாலை முழுவதும் குப்பைக் குவியலாக காணப்படுகிறது. மேலும் உணவகங்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் அதிகமாக வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, இனிவரும் காலங்களில் இதுபோன்று குப்பைகள் தேங்காத வண்ணம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.