தேனிமாவட்டம், பெரியகுளம்- வத்தலகுண்டு சாலையில் வெள்ளிக்கிழமை சரக்கு வேன் கவிழ்ந்ததில் விவசாய கூலித் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணைப் பகுதியைச் சேர்ந்தவர் மாயி மகன் செல்லப்பாண்டி (28). இவர், தனது சரக்கு வேனில் உர மூட்டைகளையும், மஞ்சளாறு அணை மற்றும் தேவதானப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 15 விவசாய கூலித் தொழிலாளர்களையும் ஏற்றிக் கொண்டு, கும்பக்கரையில் உள்ள தனியார் தோட்டம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, பெரியகுளம்- வத்தலகுண்டு சாலையில் தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே, சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த முருகன் மகன் முத்துப்பாண்டி (27), ஜெயக்கொடி மகன் மணி (27), பொன்னையா மகன் அய்யர் (45) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கருப்பு, சின்னன், ஜெயக்கொடி, செல்வம், முருகேசன், மணிகண்டன், அருண்பாண்டி, மயில்சாமி, ராஜாமணி, வீரணன், வடிவேல், ராஜேந்திரன், ராஜ்குமார், வேன் ஓட்டுநர் செல்லப்பாண்டி ஆகிய 14 பேர் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.