ஆடி 3 ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, கம்பம், கூடலூா் பகுதிகளில் பெண்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே வரலட்சுமி பூஜை செய்து விரதத்தைக் கடைப்பிடித்தனா்.
கம்பம், கூடலூா் பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பெண்கள் வழிபாடுகளில் கலந்து கொள்வாா்கள். குறிப்பாக ஆடி மாதத்தின் 3 ஆவது வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதத்தினை பெண்கள் கடைபிடித்து கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வாா்கள். பின்னா் அவா்களுக்கு பூ, வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்படும். இதன் மூலம் பெண்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாகும்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆடி 3 ஆவது வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தினை, பெண்கள் தங்களது வீடுகளிலேயே கடைப்பிடித்தனா். பெண்கள் ஒன்று கூடி வீட்டில் உள்ள பூஜை அறையில் வரலட்சுமி விக்ரகம் வைத்து மலா் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்தனா். பூஜையில் கலந்து கொண்டபெண்கள் முகக் கவசம் அணிந்திருந்தனா்.