மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தொடர் கன மழை பெய்வதால் முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர் வரத்து ஏற்பட்டு, ஒரே நாளில் நீர்மட்டம் 2.15 அடியாக உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது.
திங்கள்கிழமை 1,032 கன அடியாக தண்ணீர் வரத்து வந்த நிலையில், நீர்மட்டம் 115.75 அடி உயரமாக இருந்தது. பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் 124.2 மில்லி மீட்டர், தேக்கடி ஏரியில் - 67.2 மி.மீ., மழை பெய்தது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை அணைக்குள் விநாடிக்கு 4,784 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு, நீர்மட்டம் 117.90 ஆகி, ஒரே நாளில் நீர்மட்டம் 2.15 அடியாக உயர்ந்தது.
ஆரஞ்சு எச்சரிக்கை : மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலையாளர்கள் அறிவித்ததால், ஆக. 6 வரை ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டு, அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது என்று பெரியாறு அணை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.