தேனி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை, பனிக்கட்டியில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.
கூடலூரைச் சேர்ந்த காய் கனி சிற்பக் கலைஞர் இளஞ்செழியன் இந்த சிலையை உருவாக்கியிருந்தார். விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அரசு தடை விதித்துள்ள நிலையில், சிட்கோ தொழிற்பேட்டையில் 50 கிலோ எடையுள்ள பனிக் கட்டியை வாங்கி, அதே இடத்தில் 30 நிமிடங்களில் பனிக் கட்டியை விநாயகர் சிலையாக செதுக்கி காட்சிப்படுத்தினார்.
மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணப் பூச்சுடன் காட்சியளித்த பனிக் கட்டி விநாயகர் சிலை, சில மணி நேரத்தில் தண்ணீராக கரைந்தது. இந்த பனிக் கட்டியை போல கரோனா தீநுண்மியும் உருகி கரைந்து போகும் என்ற கருத்துடன் விநாயகர் சிலை உருவாக்கி, காட்சிப்படுத்தியதாக இளஞ்செழியன் கூறினார்.