உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதற்காக பதுக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கான 200 கிலோ ஊட்டச்சத்து மாவு வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சின்னமனூா், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் கால்நடைகளுக்கு ரேஷன் அரிசியை பயன்படுத்துவதாக, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சுக்காங்கல்பட்டியில் வெள்ளையம்மாள்புரம் சாலையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, செல்வேந்திரன் என்பவரது வீட்டில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துமாவு 200 கிலோ இருந்தது. அதை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரித்தபோது, அந்த மாவு, கால்நடைகளுக்கு தீவனமாக வழங்குவதற்காக பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட துறையான மாவட்ட குழந்தைகள் நல இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது.