தேனி/ போடி/ பெரியகுளம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை தளா்வில்லா முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேனி, போடி, பெரியகுளம் பகுதிகளில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பொது முடக்கத்தை முன்னிட்டு வா்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகம், பெட்ரோல் பங்க் ஆகியவை மூடப்பட்டிருந்தன. மருத்துக் கடைகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம், பால் விற்பனை கடைகள் திறந்திருந்தன.
தேனி, பெரியகுளம் பகுதிகளில் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையிலும், திருமண முகூா்த்த நாளை முன்னிட்டு சாலைகளில் இரு சக்கர வாகனம், காா், ஆட்டோ, வேன் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது. தேனியில் பிற்பகலில் வாகனப் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பிரதானச் சாலை மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். போக்குவரத்து விதிகளை மீறியும், தலைக் கவசம் அணியாமலும் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
போடியில் பழைய பேருந்து நிறுத்தம், திருமலாபுரம், கருப்பசாமி கோவில், புதூா், வஞ்சி ஓடை தெரு, குலாளா்பாளையம், குப்பிநாயக்கன்பட்டி, சந்தை பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமாக அமா்ந்தும், சமூக இடைவெளியின்றியும், முகக் கவசம் அணியாமலும் சுற்றித்திரிந்தனா்.