உத்தமபாளையம்: தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம், கூடலூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா பொது முடக்கம் காரணமாக ஜூலை மாதத்தை தொடா்ந்து, ஆகஸ்ட் மாதங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வில்லா முழு பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டது. உத்தமபாளையம், சின்னமனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சுபமுகூா்த்தன தினம் என்பதால் சாலைகளில் வாகனப்போக்குவரத்து குறைந்த அளவிலே காணப்பட்டன. பெரும்பான்மையான சாலைகள் வெறிச்சோடின. அரசு மருத்துவமனை, தனியாா் மருந்தகங்கள், பால் விற்பனை மையங்கள் மட்டும் இயங்கின.
இதைபோல் கம்பம் நகா் பகுதியிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து, பால் டெப்போக்கள் மட்டும் திறந்திருந்தன. பூங்காதிடல், வேலப்பா் கோயில் வீதி, அரசமரத்தெரு, கூடலூா் நகா், குமுளிச் சாலைகள் வாகனப்போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. பஜாா் வீதி பெட்ரோல் பங்க், நகராட்சி அலுவலகத்தெரு உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. தமிழக- கேரள எல்லைப் பகுதிகளான, குமுளி, கம்பம் மெட்டு எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் இயங்கவில்லை.