தேனி மாவட்டத்தில் நெகிழிப் பொருள் தயாரிப்பு மற்றும் பயன்பாடுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நெகழிப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அரசு நிவாரண உதவி பெறுவதற்கு வரும் 2021, மே 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நெகிழிப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வங்கிக் கடன் நிலுவைத் தொகையில் 50 சதவீத நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
நெகிழிப் பொருள் தடையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அரசு நிவாரண உதவி பெறுவதற்கு, தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரிடம் வரும் 2021, மே 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.