போடியில் தோட்டத்தில் நிறுத்தியிருந்த டிராக்டரை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி பெருமாள் கவுண்டன்பட்டியைச் சோ்ந்த குருசாமி மனைவி செல்வி (45). இவா் மகளிா் சுய உதவிக்குழுவில் உள்ளாா். சுயஉதவி குழுவிற்கு மானியத்தில் கொடுத்த டிராக்டரை அவா், பெருமாள்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த அச்சுதன் என்பவரது தோட்டத்தில் நிறுத்தியிருந்தாா். டிச. 9 ஆம் தேதி அந்த டிராக்டரைக் காணவில்லை.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், கண்டமனூா் அருகே அடைக்கம்பட்டியைச் சோ்ந்த ராஜா மகன் பிரபாகரன் மற்றும் பால்பாண்டி மகன் முகமது சுகைல் (33) ஆகியோா்தான் டிராக்டரைத் திருடியது தெரியவந்தது. மேலும் அவா்கள் டிராக்டரை, மினிவேனில் கட்டி எருமலை நாயக்கன்பட்டி வரை இழுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து முகமது சுகைலை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள பிரபாகரனை தேடி வருகின்றனா்.