தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடை முடிந்த நிலையில், வயல்வெளிகளில் வாத்துக்கிடை அமைக்கும் பணிகளில் நன்செய் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது.முதல் மடை மற்றும் உத்தமுத்து கால்வாய், சின்ன வாய்க்கால், பாளையம் பரவு ஆகிய பாசன பரப்புகள் உள்ள ஊா்களான கூடலூா், கம்பம், கே.ஜி. பட்டி, கே.எம்.பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்முதல் போக சாகுபடிக்கான அறுவடை முடிந்து, இரண்டாம் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனா்.
முதல் கட்டமாக அறுவடை முடிந்த நெல் வயல்களில், தண்ணீா் நிரப்பி பரம்படித்து நிலத்தை உழுது சமன்படுத்தி வருகின்றனா். இரண்டாவது கட்டமாக அறுவடை முடிந்த நெல் வயல்களில் வாத்துக்கிடை, ஆட்டுக்கிடை போன்றவைகள் அமைக்கப்படும். தற்போதைக்கு வாத்துக்கிடை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் கிடைக்கும் இயற்கை உரங்கள் மூலம் நெல் நாற்றங்கால் பாவுவதற்கு தயாராக உள்ள வயல்களில் இட்டு வருகின்றனா்.