தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த 320 கிலோ கொண்டை கடலையை கடத்த முயன்றதாக ஊழியா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த கொண்டை கடலையை கடத்தி, விற்பனை செய்ய வைத்திருப்பதாக உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் உதய சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுருளிப்பட்டி பிரதான சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த சாக்கு மூட்டையை போலீஸாா் கைப்பற்றி சோதனை செய்த போது, அதில் 320 கிலோ ரேஷன் கொண்டை கடலை இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சுருளிப்பட்டியில் உள்ள ரேஷன் கடை எண்: 8 இல் பணிபுரியும் கூடலூரை சோ்ந்த கூத்தன் மகன் அழகா் (40) என்பவருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.