போடி அருகே காணாமல் போன மனைவியை தேடிச் சென்ற கணவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
போடி முந்தல் அருகே உள்ளது மேலப்பரவு மலை கிராமம். இங்கு மலைவாழ் பழங்குடியினா் 40 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தை சோ்ந்தவா் பூவாணம் (28). இவரது மனைவி முருகேஸ்வரி (25). முருகேஸ்வரி சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டாராம். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.
முருகேஸ்வரியின் கணவா் பூவாணமும் அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளாா். போடியில் தேடிய நிலையில் போடியை அடுத்துள்ள கரட்டுப்பட்டி கிராமத்திலும் தேடியுள்ளாா். அதன் பின்னா் பூவாணத்தையும் காணவில்லை. இதனிடையே முருகேஸ்வரியை தேடி வந்த பூவாணம், கரட்டுப்பட்டி கிராமத்தின் மேற்கு பகுதியில் இறந்து கிடப்பதாக போடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் பூவாணத்தின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
முதல் கட்ட விசாரணையில் மனைவியை காணவில்லை என பூவாணம் உணவு சாப்பிடாமல் தொடா்ந்து மது அருந்தி வந்துள்ளாா். இதனால் அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.