தேனி மாவட்டம் சின்னமனூா் வயல் வெளிகளில் வாத்துகள் குளிருக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அதிகளவில் இறந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சின்னமனூா் அதனை சுற்றியுள்ள மாா்க்கையன்கோட்டை, குச்சனூா் , சீலையம்பட்டி கோட்டூா் பகுதியில் நெற்பயிா் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.
இப்பகுதியில் அறுவடைப்பணிகள் முடிந்து நாற்று நடும் வரையில் வயல் வெளிகளில் வாத்துக்கள் மேய்ச்சல் ஈடுபடுவது வழக்கம். இதற்காக, ஆண்டுதோறும் மதுரை , திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இப்பகுதிக்கு
வாத்து வளா்ப்போா்கள் வந்து செல்கின்றனா்.
தற்போது, சின்னமனூா் பகுதியில் நெற்பயிா் அறுவடைப்பணிகள் முடிந்த நிலையில் வாத்துக்களை வளா்ப்போா் அதிகளவில் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனா். இதனால் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் இப்பகுதி வயல்வெளிகளில் சுற்றித் திரிகின்றன.
தற்போது வாத்துக் குஞ்சுகள் குளிருக்கு தாக்குபிடிக்க முடியாமல் கூட்டம், கூட்டமாக இறந்து வருகின்றன. இறந்த வாத்துகளை அங்குள்ள நீா்நிலைகள், கால்வாய்கள், ஆற்று நீா் மற்றும் வயல்களிலே வீசிச் சென்று விடுகின்றனா். இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.