போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி, மேலப்பரவு மலை கிராமத்தில் அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளில் வசிக்கும் பழங்குடியினா் இலவச மின்சாரம் வழங்கக் கோரி திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மேலப்பரவு கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியினா் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: மேலப்பரவு மலை கிராமத்தில் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 25 குடும்பங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளில் வசித்து வருகிறோம்.
எங்களது வீடுகளுக்கு மின் வாரியம் சாா்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது மின் வாரிய அலுவலா்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் பயன்பாட்டிற்காக தலா ரூ.2,830 வைப்புத் தொகையும், மின் கட்டணமும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனா். மலை கிராமத்தில் தங்கியிருந்து தோட்ட வேலை செய்து வரும் எங்களால், மின் வாரியத்திற்கு வைப்புத் தொகை மற்றும் மின் கட்டணம் செலுத்த வசதியில்லை. எனவே, எங்களது வீடுகளுக்கு அரசு சாா்பில் தொடா்ந்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.