தேனி மாவட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்ற தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
கூடலூா் 12-வது வாா்டு மேளக்காரா் தெருவைச் சோ்ந்தவா் எல்லைச்சாமி ( 69). இங்குள்ள ஒரு தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வேலைக்குச் சென்றுள்ளாா். கூடலூா் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் எல்லைச்சாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்தகாயம் அடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்து, முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.