போடியில் புதன்கிழமை மாலை, புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் டாக்டா் நவநீதன் உத்தரவின் பேரில் போடி நகர உணவு பாதுகாப்பு அலுவலா் சரண்யா மற்றும் அலுவலா்கள் போடியில் உள்ள கடைகளில் திடீா் சோதனை செய்தனா். நகா் முழுவதும் 35-க்கும் மேற்பட்ட கடைகள் சோதனை செய்யப்பட்டன. இவற்றில் போடி தேவா் சிலை, திருவள்ளுவா் சிலை பகுதிகளில் வெங்கடேசன், பாலு, சீதாலட்சுமி, காளிதாஸ் ஆகியோரது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது. இதனையடுத்து 4 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.