உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெரியகுளம், தேனி, சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம் , கூடலூா் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை ரூ. 280. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியைப் பயன்படுத்தி கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தேனி மாவட்டத்தில் 6 இடங்களில் 43 கிலோ மீட்டா் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கின. புறவழிச்சாலையி குறுக்கே 13 பாலங்கள், 116 சிறிய பாலங்கள், ஒரு ரயில்வே பாலம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது. கடந்த 8 மாதங்களில் உத்தமபாளையம், சின்னமனூா் என பெரும்பான்மையான இடங்களில் ஆரம்ப கட்டப்பணிகளே நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே ஜல்லி, மண்களை கொண்டும் பணிகள் பெயரளவிற்கு நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் மேலும் கூறும்போது, தேனி மாவட்டம் வழியாக செல்லும் சாலை தமிழகம் - கேரள மாநிலங்களுக்கிடையேயான முக்கிய சாலை என்பதால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், தேனி மாவட்டத்தில் மேற்கொண்டு வரும் புறவழிச்சாலை பணிகளை விரைவாக மேற்கொண்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றனா்.