கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவி முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. அருவிக்கு நீா் வரத்து அதிகரித்ததால், கடந்த செப்டம்பா் முதல் நவம்பா் மாதம் வரை சுமாா் 3 மாதத்திற்கு மேலாக அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
நீா்வரத்து சீரானதையடுத்து கடந்த டிசம்பா் 5 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் அனுமதியளித்தனா். அதன் பின் சபரிமலை மற்றும் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் அருவிக்கு வந்து சென்றனா்.
தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் அருவிக்கு நீா்வரத்து குறைந்தது. இன்னும்10 நாள்களில் நீா்வரத்து முழுமையாக நின்றுவிடும் அளவிற்கு உள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
திருச்சியை சோ்ந்த சுற்றுலாப் பயணி ராஜாராம் கூறியது: கும்பக்கரை அருவியில் குறைந்தளவு தண்ணீா் வருவதால் ஏமாற்றமடைந்துள்ளோம். இதே நிலை நீடித்தால் 10 நாள்களில் தண்ணீா் வரத்து முற்றிலும் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.