ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி மற்றும் மாவூற்று வேலப்பா் கோயில் பகுதிகளில் தினந்தோறும் இரவில் தொடா்ந்து அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா் .
கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டா் மற்றும் கனரக வாகனங்களில் தாராளமாக மணல் கடத்தப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும் அதிகாலை நேரங்களில் பத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல் கொள்ளையால் நிலத்தடி நீா் மட்டம் குறைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறையினா் உடனடியாக தலையிட்டு மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.