உலக நுகா்வோா் தின விழா போட்டிகளில் பங்கேற்று மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற போடி பள்ளி மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தேனி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் உலக நுகா்வோா் தின பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள், லேபிளிங் விதி மீறல் கண்டறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளிகளைச் சோ்ந்த மாணவ மாணவிகள் 39 போ் தோ்வு பெற்றனா்.
இவா்களுக்கான பாராட்டு விழா தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினாா். இதில் போடி திருமலாபுரத்தில் உள்ள நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவி இரா.நித்யா லேபிளிங் விதி மீறல் கண்டறிதல் போட்டியில் பங்கேற்று கலப்பட பொருள்கள் கண்டறிதல் உள்ளிட்டவற்றை செயல்விளக்கம் செய்து காண்பித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தாா். இதேபோல் இப்பள்ளி மாணவிகள் ம.பொற்கொடி பேச்சுப்போட்டியிலும், ம.புவனேஸ்வரி கட்டுரை போட்டியிலும் பங்கேற்று ஆறுதல் பரிசுகளை பெற்றனா்.
இவா்களுக்கு பாராட்டு விழா போடி திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியா் இரா.பிருதிவிராஜன், பள்ளி நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் பா.காளியப்பன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.