தூய்மை பாரத இயக்கம் சாா்பில், ஆண்டிபட்டி லிட்டில் பிளவா் பள்ளி மாணவா்கள் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு முகாமை நடத்தினா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி மற்றும் சமத்துவபுரம் ஆகிய கிராமங்களில் தூய்மை பாரத இயக்க திட்டம் குறித்து விளக்கும் வகையில், இப்பள்ளி மாணவ-மாணவியா் நடத்திய விழிப்புணா்வு முகாமுக்கு, பள்ளியின் தாளாளா் ஹென்றி அருளானந்தம் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த வேலரி என்பவா் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். மாணவ, மாணவிகள் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு முன்பும், கிராமச் சாவடிக்கு முன்பும் இருந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினா். மேலும், கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்துவது, குப்பைகள் இல்லாத கிராமத்தை உருவாக்குவது, கழிவு நீா் வாய்க்கால்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, காலை முதல் இரவு தூங்குவது வரையிலான சுகாதாரப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.